Tuesday, January 24, 2017

மெரினா புரட்சி

மெரினா  புரட்சியை  நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது வாரி இறைக்காமல் இருக்க ஒரே ஆயுதம் .

Thursday, March 22, 2012

ரொம்ப நாள் கழித்து ஒரு பதிவு..

ரொம்ப நாள் கழித்து ஒரு பதிவு..

அமீரக வாழ்க்கைக்கு ''டாட்டா'' காட்டிவிட்டு வந்து மாதங்கள் கடந்து விட்டன. குடும்ப வாழ்க்கை மிக வேகமாக , ஜோராக சென்று கொண்டிருப்பதால் 'இந்த' பக்கம் தலை வைத்து கூட படுக்க முடியவில்லை. சரி எழுதுவோமே அப்படின்னு போன நிமிடம் முடிவெடுத்து இந்த நிமிடம் எழுத ஆரம்பிக்கிறேன்.

பசங்க..

விரிவுரையாளனாக மாறிய பிறகு கொஞ்சம் கோபப்பட ஆரம்பித்து விட்டேன் இல்லை மாற்றப்பட்டு விட்டேன். கல்லூரி எளிதாக என் மனநிலையை மாற்றி விட்டது. பல ஆசிரியர்களுக்கே உரிய அந்த சர்வதிக்காரப்போக்கு என்னையும் பிடித்துவிட்டது (வினோத்து நீ 'யூத்து'டா ஒரு யூத்தோட பீலிங்க்ஸ் இன்னொரு யூத்துக்கு தான் தெரியும் என்று மனசு சொன்னாலும்). அவங்க பண்ணுகின்ற சின்ன சின்ன காரியங்கள் கூட என்னை நம்பியார் போல பாவிக்க வைக்கின்றன (.ம்) ஒரு பெண் மாணவர்களை கடந்து செல்லும்பொழுது அவர்கள் எதாவது சிரித்து பேசினால் கூட அவர்களை முறைத்து பார்க்கிறேன். பசங்க அப்படி தான் இருப்பாங்க என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது.சிம்பிள் லாஜிக், கல்லூரியில் புதிதாக சேரும் மாணவன் ''யப்பா, தப்பிச்சோம்டா ஸ்கூல் லைப்லிருந்து இனி ஜாலி தான்'' என்கின்ற மனநிலையோடு தான் வருகின்றான். தப்பிதவறி அவர்கள் அடியெடுத்து வைக்கும் காலேஜ் ஒரு முதன்மை கல்லூரியாக இருந்தால் கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மாணவர்களை ''ஏன்டா இந்த காலேஜ்க்கு வந்தோமென்று'' யோசிக்க வைத்து விடுகின்றது. அவ்வளவு கெடுபிடிகள், கட்டுப்பாடுகள். எல்லாமே ரிசல்ட் என்னும் மாய மோகினிக்காக. அதனால் அவர்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் எங்களை போன்ற ஆசிரியர்களையும் ஒரு கட்டத்தில் அடக்கிவிடுகிறது. அந்த கட்டுப்பாடுகளே என்னை போன்றவர்களையும் மாற்றி விடுகிறது. அதுவும் முன்பு இருந்தது போல இல்லாமல் பசங்களுக்கு வெளியுலக விஷயங்களும், தொடர்புகளும் குறுகி போய்விட்டன. வீட்டுக்கு போனால் மொபைல், FB இவை இரண்டும் போதும். கல்லூரியில் படிப்பின் வழியாக திணிக்கப்படும் அழுத்தம், அவர்களுக்கே தெரியாமல் வீட்டில் தொழில்நுட்பத்தின் மூலம் திணித்து கொள்கிறார்கள். பாவம் பசங்க.

புதுச்சேரி..


ஏன் இந்த ஊரு இப்படி மாறுச்சுன்னு தெரியல. புதுவை என்றாலே ஏதோ ஒரு தனித்துவம் வாய்ந்த அழகு என்று யார் சொல்லியும் கேக்கலாம் ஒரு பத்து வருடங்களுக்கு முன்வரை. ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழ்.எங்கே போனாலும் கூட்டம், நெருக்கம், டிராபிக், கடுப்பு..பாண்டிச்சேரி இன்னொரு சென்னையாக மாறிக்கொண்டு வருகிறது. ஒரு பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்த புதுவையை நினைத்து மனது ஏங்குகிறது.இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடங்கி பக்கத்து வீட்டு அல்லக்கை நாய் வரை ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து ஊரையே பாதி மறைத்து கொள்கிறார்கள். இதில் இந்த சினிமாக்காரர்கள் வேறு ஆனாஊனா கையில் கேமராவை எடுத்துக்கொண்டு கிளம்பி வந்துவிடுகிறார்கள்(இனிமேல் அதுவும் இருக்காது 'தானே'க்கு பிறகு மரமெல்லாம் முக்கால்வாசி காணாமல் போய்விட்டது).இனிமேல் நினைத்தாலும் பழைய பாண்டியை பார்க்கமுடியாது..முழுவதும் வர்த்தக மயம்மாக்கப்பட்டு நிறையவே சிரழிந்துவிட்டது. சட்டம் ஒழுங்கு இன்னும் மோசம். எந்த கடை திறக்குதோ இல்லையோ காலையில் 8 மணிக்கெல்லாம் இந்த BARரை திறந்து வைத்துகொள்கிறார்கள். அதற்காவது இந்த நேரத்தில் தான் திறக்க வேண்டுமென்ற கட்டுப்பாடை கொண்டு வரலாம்.ஊரிலிருக்கும் பெருபான்மையான தியேட்டர்களை இடித்து தள்ளிவிட்டு ஒரே தியேட்டரில் ஒன்பது படத்தை ஓட்டுகிறார்கள்.இப்படி சகலவிதத்திலும் பாண்டி திராபையாக மாறிவிட்டது.

Sunday, May 1, 2011

வாழ்த்துக்கள் தல ..

அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்..


http://flashnewstoday.com/wp-content/uploads/2010/12/Mankatha_Poster1.jpg


1. அந்த நபர் முதலில் ஒரு கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டு இருந்தார்..தான் எடுத்து வரும் பைக்கில் ஃ பிரன்ட் வீல் பிரேக் கேபிள் வயரை வேண்டும் என்றே துண்டித்து வைத்து இருப்பார்..உடன் பணி புரியும் நபர்கள் ஏன் இப்படி என்று கேக்கும் பொழுது.."அண்ணா நான் ஒரு ரேசர்,அப்புறம் பேசிக்கா ஒரு மெக்கானிக் எனக்கு எப்பொழுதும் இதே மாதிரி வண்டி ஓட்டுவதில் ஒரு த்ரில் இருக்கும்".. என்று சொல்லும்பொழுது மற்றவர்கள் சிறிது ஆச்சரியப்பட்டனர்..

2. அப்புறம் மாடலிங் துறையில் வந்து..சினிமாவில் நடிக்க வந்து கொஞ்சம் காலம் போன பிறகு வாய்ப்பு இல்லாமல் மறுபடியும் ரேஸ் என்று சுற்றி கொண்டு இருந்தவர்..அடுத்து அடுத்து சந்திதது எல்லாம் பயங்கரமான விபத்துக்கள்..வாழ்விலும், ரேசிலும்..அப்புறம் மறுபடியும் தேறி வந்து நடிக்க ஆரம்பித்து கொஞ்சம் பிரபலம் ஆனார்..

3. நடிக்க ஆரம்பித்து பிரபலம் ஆனா பிறகும் வாழ்வில் ஒரு பிடிப்பு இன்மை..நண்பர்களோடு சுற்றுவது..

கிடைத்த சில நடிகைகளின் நட்ப்பும்,
காதலா நட்ப்பா என்றே தெரியாமல் அல்லாடி கொண்டு இருந்தார்..

அப்பொழுது தன்னுடன் ஒரு படத்தில் தான் சேர்ந்து நடித்து இருந்தாலும் நடிகை ரோஜாவின் குடும்பத்தோடு கொஞ்சம் நட்பு வைத்து இருந்தார்..

நடிகையை சிஸ்டர் என்று தான் அழைப்பார்..

ஒரு மனம் வெறுத்து போன காலகட்டதில் அவரின் வீட்டுக்கு சென்று ரோஜவிடமும், ரோஜாவின் கணவர் பிரபல டைரக்டர் செல்வாமனியிடமும் .."ஏன் சிஸ்டர் எனக்கு மட்டும் இப்படி நடக்குது".. என்று அழுதவரை தேற்றி சீக்கிரம் கல்யாணம் செய்து கொள் எல்லாம் சரி ஆகிவிடும் என்று சொல்லி அனுப்பினார்கள்.

4.மறுபடியும் சினிமாவில் ஒரு படம் முலம் ஓரளவு நல்ல பெயர் எடுத்து விறுவிறுவென்று வளர்ந்து கொண்டு இருந்த சமயம்..ஒரு படத்தின் ஷூட்டிங் பொழுது தன்னுடன் நடித்த நடிகையின் கையை கத்தியால் கிழிப்பது போல் ஒரு காட்சியில் நிஜமாகவே தவறுதலாக கிழித்து விட்டார்..அங்கு தோன்றிய பாசம் காதலாக உருவெடுத்து திருமணத்தில் போய் முடிந்தது..

5. ஒரு நாள் ஒரு புகழ் பெற்ற ஆடை நிறுவனம் ஒன்றில் தம்பதி சகிதமாய் இருவரும் சென்று ஷாப்பிங் செய்து வீட்டுக்கு வந்த பின் ஒரு தொலைபேசி.. அழைத்தவர் கடையின் உரிமையாளர்.."தங்களுக்கு தவறாக அதிகமாக பில் போட்டு விட்டோம்..பணத்தினை திருப்பி தர வருகிறேன்"..என்று கூறியவரிடம் நீங்கள் இருங்கள் நான் அங்கே வருகிறேன் என்று சென்றவர்..அவரின் நேர்மையை பாராட்டி இன்னும் மேலும் ஒரு தொகையை சேர்த்து கடையில் உள்ள அனைவர்க்கும் பிரித்து கொடுக்கும்படி சொல்லிவிட்டு விருட்டேன்ற்று சென்றார்..

6. எழுத்தாளர் மனுஷ்யப்புத்திரன் அந்த நடிகரோட நட்பு வட்டாரத்தில் இருக்க கூடிய எழுத்தாளர் மற்றும் நிருபர். ஒரு சமயம் அவர் வெளியிட்ட ஒரு செய்தியின் காரணமாக கொஞ்சம் கடுமையகவே மனுஷ்யப்புதிரனிடம் நம் நடிகர் கோபித்து கொண்டு உள்ளார்.அதன் பிறகு நீண்ட நாள் இருவரும் சந்திக்கவில்லை..ஒரு பொது நிகழ்ச்சியில் எதிர்பாரதவிதமாக மானுஷ்யவை சந்திக்க நேர்ந்த பொழுது அவரிடம் திரும்ப திரும்ப நான் அன்று அப்படி நடந்து கொண்டு இருக்க கூடாது என்று வலுகட்டயமாக சென்று அவர் பக்கத்தில் அமர்ந்து மன்னிப்பு கேட்டு உள்ளார்..மனுஷியவே நெகிழ்ந்து போகும் அளவுக்கு..

7. ஸ்டண்ட் யூனியன் ஆட்கள் அவர்களுக்கு என்று ஒரு தனி உடற்பயிற்சி மையம் ஆரம்பித்த சமயத்தில் அதற்கு என்று உதவி பண்ணியதில் இவருக்கும் பெரும் பங்கு உண்டு..

அந்த திறப்பு விழாவுக்கு நம்மை தொழில்ரீதியாயாக பார்க்காமல் சக மனிதனாக மட்டுமே பார்க்கும் நபரை தான் கூப்பிட வேண்டும் முக்கியமாக இதை வைத்து அவர்கள் விளம்பரம் தேடிக்கொள்ள கூடாது..யாரை கூப்பிடலாம் என்று யூனியன் ஆட்கள் யோசித்து கொண்டு இருந்த வேலையில் எல்லோரும் ஒருமித்த குரலில் சொன்ன ஒரே பெயர் இவர் பெயர் மட்டும் தான்.அழைத்தபொழுது அவரும் சந்தோஷமாக கலந்து கொண்டார்.

8. பிரபல நட்சத்திர ஹோட்டல் அது பெரும்பாலும் அங்கு வரும் நட்சத்திர நடிகர்கள் அங்கு பணிபுரியும் வெயிட்டர்கள் சிரித்தால் கூட சிரிக்காமல் முகத்தை திருப்பி கொள்பவர்கள்..வரும் நட்சத்திர குடும்பதினர் ஒரு வித அமைதியை எப்பொழுதும் கடைப்பிடிபார்..அனால் நம் நடிகரின் குடும்பம் அப்படி இல்லை..போனால் ஒரே அமர்க்களம் தான்..சகஜமாக பழகுவார்கள்..

இப்படி ஒரு புது வருட சிறப்பு நிகழ்ச்சிக்கு கிச்சன்னில் வேகமாக தயார் பண்ணி கொண்டு இருந்த ஊழியர்கள் சற்றும் எதிர்ப்பார்க்காமல் ஒரு காரியம் நடந்தது..திடிர் என்று கிச்சன்னில் உள்ளே நுழைந்த நம் நடிகர் அங்கு பணிபுரியும் கடைநிலை ஊழியர் வரை கைப்பிடித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றார்..


9. நம் நடிகர் நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் தன் நண்பரின் காரில் அவரை ஓட்ட சொல்லி ஊர் சுற்றுவார்.அப்படி சமிபத்தில் சென்ற பொழுது கார் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது..உடனே இறங்கிய நமது ஆள் அந்த நண்பரை ஸ்டேரிங் பிடிக்க சொல்லி விட்டு கிட்டதட்ட இரண்டு கிலோமீட்டர்கள் பெட்ரோல் பங்க் வரை தள்ளி சென்று இருக்கிறார்..இருட்டு சமயம் என்பதால் மற்றவர்கள் கண்ணில் படாமல் பார்த்து கொண்டார்.

10. ஒரு ஆட்டோ ஓட்டுனர் தன்னுடுய கல்யாணத்திற்கு அழைத்த பொழுது முடிந்தால் வருகிறேன் என்று சொன்னவர்..தன் மனைவி குழந்தையுடன் கலந்து கொண்டார்...இதை சற்றும் எதிர்ப்பார்க்காத ஓட்டுனர் சற்று ஆனந்த அதிர்ச்சியில் "என்ன தல, நீ முன்னாடியே வரனு சொல்லி இருந்த ஏற்பாடு எல்லாம் தடபுடலா பண்ணி இருப்பானே"..என்று சொல்ல அதற்கு தல சொன்ன ஒரே வார்த்தை.."அதனால் தான் சொல்லவில்லை."

நான் யாரை பற்றி சொல்கிறேன் என்று கண்டிப்பாக இந்நேரம் தெரிந்திருக்கும்.


நான் மிகவும் நேசிக்கும் ஒரு மனிதர்..கவனிக்கவும் நடிகர் என்பதை விட நல்ல மனிதர் என்ற அளவில் அவர் பல லட்சம் பேரின் மனம் கவர்ந்தவர்..தன்னம்பிகையின் சிகரம்..

எனக்கு தெரிந்து கலை உலகம் என்று இல்லை..

மற்ற எந்த துறையில் இருந்து இருந்தாலும் பல பேர் மதிக்கும் நபராக தான் இருந்து இருப்பார்..பல பேரின் ரோல் மாடலாக..

இருந்தும் ஒரு ஆதங்கம் இன்னும் கதையில் கூடுதல் கவனம் செலுத்தி வேறு ஒரு அருமையான பாதையில் செல்லலாம்..வாலி,முகவரி இப்படி ஏன் கிரீடம் கூட எடுத்து கொள்ளலாம்..

தடைகள் வந்தாலும் அதை உடைத்து எரியும் தன்மை கொண்டவர்..அவரே சொல்வது போல் "வாழ்கையில் ஏற்படும் தோல்வியை கண்டு எனக்கு பயம் இல்லை ஏன் என்றால் நான் நூறு முறை ஜெயித்தவன் அல்ல ஆயிரம் முறை தோற்றவன்..".


அவரின் பிறந்தநாள் இன்று..
வாழ்த்துக்கள்..

Sunday, August 22, 2010

நானும் இங்க தான் இருக்கேன் ..

ஹாய்..ஹாய்...


பாருங்க இங்க அபுதாபி பணி மாற்றம் ஆனதிலிருந்து ஏகப்பட்ட வேலைகள், பிஸி பிஸி பிஸி...இணையம், பேஸ் புக், பிளாக்கர் இதுக்கெல்லாம் நேரமே இல்லை..எப்பபாரு வேலை வேலை வேலை..இது ஒன்றே சிந்தனையா இருக்கு..(மேல நான் சொல்லியிருக்குறது உண்மைன்னு யாரும் நம்ப மாட்டிங்கன்னு தெரியும் ..சத்திய சோதனை) சமிபகாலமா எதுவும் எழுதமுடியல , எழுதவும் தோணல. அதுக்காக மத்தவங்க மாதிரி உலகம் ரொம்ப பெருசு, வெளியே கத்துக்க வேண்டிய விஷயம் நிறையா இருக்கு, இங்க குண்டு சட்டில குதிரை ஓட்ட விரும்பலன்னு நான் சொல்ல மாட்டேன்..என்ஜாய் மக்களே..எல்லாமே இலவசம் தான்..ஓகே..சில விஷயங்கள் பற்றி பார்ப்போம்..


அஜித்+கெளதம்:


ரொம்ப எதிர்ப்பார்த்த காம்பிநேஷன்..எதிர்ப்பார்த்த மாதிரியே புட்டுக்குச்சு. இனிமேல் சேர்வதற்கான வாய்ப்பே இல்லைங்கிற மாதிரி தான் தெரியுது. கெளதம் சொலுற மாதிரி அஜித்தை திசை திருப்பும் சக்திகள் அவர சுத்தியே இருக்கு..அதையெல்லாம் மீறி அந்த இமேஜ் வட்டத்தை விட்டு அவர் வெளியே வரணும்.காமெடி இயக்குனர்கள் கூட சேர்ந்துக்கிட்டு காமெடி பண்ண கூடாதுன்னு தான் என்னோட விருப்பம்.எனக்கு பிடிச்ச இயக்குனர்கள் கூட அஜித் எதோ ஒரு ப்ராஜெக்ட் பண்ண போறார்னு செய்தி கேள்விப்பட்டாலே எப்படியோ புட்டுக்க தான் போகுதுன்னு தோணுது ( முன்னாடி பாலா..இப்ப கெளதம்).


எந்திரன்+ ரெஹ்மான்:


எந்திரன் சாங்க்ஸ் பிடிக்கிற மாதிரி இருக்கு..இருந்தாலும் படம் பார்த்தவுடன் தான் தெரியும். ஆனா ரெஹ்மான் தமிழ் இசையில் மட்டும் ஏன் தன்னை ஒரு குறுகிய வட்டத்தில் அடைத்து கொள்கிறார் என்று தெரியவில்லை. தமிழ்ல ஒரு டெல்லி-6 , ரங் தே பசந்தி மாதிரியான முயற்சிகள் பண்ண வேண்டும்..ஆனால் அதற்கான கதைக்களன் அமையவேண்டும்.அவரை மட்டும் என்ன சொல்லுவது..எல்லாம் உங்களுக்கு இது போதும்ன்னு நினைச்சிட்டாரோ. கடைசியா கொஞ்சம் வித்தியாசமா பண்ணி இருந்தது VTV.அதுக்கப்புறம் ராவணன் ஒரு பாட்டாச்சும் கேக்குற மாதிரி இருக்கணுமே..ம்ம்ஹும்ம். ரஹ்மான் ஆல்பத்தில் ஒரு சுமாரான ஆல்பம் எதுன்னு கேட்டா காதை மூடிக்கொண்டு 'ராவணன்' என்று சொல்லிவிடலாம்.


உலகப்படம் + நான்:


நான் ஒரு படம் பார்த்தேன் நண்பர் கார்த்திகேயன் உபயத்தில்..அது உலகப்படமான்னு தெரியுல ஆனா சோகமா இருந்துச்சு..என்னை பொறுத்தவரை சோகமா இருக்கிற எல்லா படமும் உலக படம் தான். சோகமா இருந்தா கூட பரவில்லை எளவு 'கொடூரமா அருவெறுக்கதக்க' வகையில் இருந்தது நான் பார்த்த அந்த கொரியன் படம் (Three Extremes )..தயவுசெய்து அந்த படத்தை பார்த்துறாதிங்க. அப்புறம் ''சே''ன்னு ஒரு படம் பார்த்தேன் ''ச்சே''ன்னு ஆயிடுச்சு..மகத்தான ஒரு தலைவனின் படம்.ஆனா அவனுங்க எடுதிருக்கானுங்க பாருங்க உலக மகா மொக்கைடா சாமி..பேசுறானுங்க பேசுறானுங்க பேசிக்கிட்டே இருக்கானுங்க. கொஞ்சம் விட்டா லேப்டாப் விட்டு இறங்கி வந்து நம்மக்கிட்டாயே பேசுவானுங்க போல. நானும் ஒரு வாரமா பார்கிறேன் படம் முடியும் முடியும்னு..ம்ம்ஹும்ம்ம்..வழியே இல்ல.


புத்தகம்+நான்(சத்தியமா நான் தான்)

காடு..நம்ம ஜெமோ எழுதுனது..நண்பர் கார்த்திகேயன் உபயத்தில் படித்தது(எதையும் காசு போட்டு வாங்க மாட்டியடா வெண்ண அப்படின்னு கேக்காதிங்க). காடு பற்றி நுட்பமா அவ்வளோ தகவல்கள்..பல வருடங்கள் அலைந்து திரிந்து காடை நம் வாழ்வின் ஒரு அங்கமாக உருவாக்கி மனதில் ஏற்றினால் ஒழிய இப்படி விரிவாக எழுத முடியாது. ஆனா பாருங்க நிறைய இடத்துல ஒன்னுமே புரியல..இருந்தாலும் படிக்கிறேன் படிக்கிறேன் படிச்சிக்கிட்டே இருக்கேன். நேத்து படிக்கிறப்ப தான் எதோச்சையா கடைசி பக்கம் பார்த்தா 'ஒரு தேர்ந்த வாசகனுக்குக்கான' படைப்பு அப்படின்னு போட்டிருக்கு..அப்புறம் எப்படி எனக்கு புரியும். எனக்கெல்லாம் ஆத்துல தண்ணி ஓடுதுன்னு சொன்ன தான் புரியும்..அத விட்டுட்டு வானத்தில் இருந்து கரைத்து ஊற்றிய பல பிம்பங்கள் ஓன்று சேர்ந்து மண்ணில் கனத்தோடு உறவாடி ஓடியது அப்படின்னு சொன்னா ஒரே சமயத்துல நாலு உலகப்படம் பார்த்த மாதிரி தலைய சுத்தி ஸ்டார் ஸ்டாரா பறக்கும். இருந்தாலும் அந்த புஸ்தகத்தை படிக்காம இருக்க முடியல.கிரியோடு சேர்ந்து நானும் காட்டில் அலைந்து கொண்டிருக்கிறேன் இப்போதெல்லாம்.